மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு

மேட்டூர் அணையிலிருந்து இன்று காலை முதல் கால்வாயில் தண்ணீர் திறப்பு 500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று 8 ஆயிரத்து 575 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 8 ஆயிரத்து 608 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து காவிரியில் டெல்டா பாசனத்திற்காக 6 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 700 கன அடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டு வந்தது.

இன்று காலை முதல் கால்வாயில் தண்ணீர் திறப்பு 500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரைவிட அணையில் இருந்து குறைந்த அளவே நீர் திறந்துவிடப்படுவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 92.24 அடியாக இருந்த நிலையில் தற்போது தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் இன்று மேலும் உயர்ந்து 92.37 அடியானது.