மருத்துவமனை அலட்சியத்தால் குழந்தை இறந்ததாக கூறி உறவினர்கள் வாக்குவாதம்

சென்னை: மருத்துவமனையின் அலட்சியத்தால் குழந்தை இறந்ததாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தைப் பொறுத்த வரையில் கடந்த சில நாட்களாகவே மருத்துவர்களின் அலட்சியத்தால் குழந்தை இறந்து பிறக்கும் நிகழ்வு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அந்த வகையில் நங்கநல்லூரைச் சேர்ந்தவர் கர்ப்பிணி பெண் ஸ்ரேயா பானு. இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு 24 மணி நேரத்திற்கு முன்பே குழந்தை இறந்து விட்டதாகவும், இதனால் பிறக்கும் போதே இறந்து பிறந்ததாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதனை ஏற்க மறுத்த பெண்ணின் உறவினர்கள், 24 மணி நேரத்திற்கு முன்பு எவ்வாறு குழந்தை இறந்து இருக்கும் எனக்கூறி மருத்துவரிடம் விளக்கம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.