எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து தொடர்பாக விவாதம் நடத்த தீர்மானம்

இலங்கை: விவாதம் நடத்த தீர்மானம்... எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து தொடர்பாக இரண்டு நாள் ஒத்திவைப்பு விவாதத்தை நடத்துவதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் குழு தீர்மானித்தது.

இதன்படி எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்ட ஒத்திவைப்பு வேளை விவாதத்தை இன்றும் நாளையும் காலை 9.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று (புதன்கிழமை) நாடாளுமன்ற அமர்வு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியபோது நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஒழுங்கு பிரச்சினையை எழுப்பினார்.

இதன்போது எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த விவாதம் சட்டவிரோதமானது என நீதி அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

எனவே கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் எடுப்பதற்காக சபை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.