ஓய்வு பெற்ற டாக்டர் கொரோனாவுக்கு பலி

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓய்வு பெற்ற டாக்டர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது உடல் சென்னையில் அடக்கம் செய்யப்பட்டது.

மயிலாடுதுறை அருகே குத்தாலம் தாலுகா அரையபுரம் அக்ரஹார தெருவை சேர்ந்தவர் சுவாமிநாதன்(வயது 75). குழந்தைகள் நல மருத்துவரான இவர், தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டீன் ஆக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஓய்வுக்கு பின்பு குத்தாலம் அருகே பழைய கூடலூரில் உள்ள தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான மருத்துவமனையில் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு உறவினர் இல்ல நிகழ்ச்சிக்காக டாக்டர் சுவாமிநாதன் குடும்பத்தினருடன் சென்னை சென்றார். அங்கு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இதனைத்தொடர்ந்து அவருக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் டாக்டர் சுவாமிநாதன் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் சென்னையிலேயே அடக்கம் செய்யப்பட்டது.