ரியா சக்ரபோர்த்தி எனது மகனுக்கு விஷம் கொடுத்துள்ளார் - சுஷாந்த் சிங் தந்தை பரபரப்பு குற்றச்சாட்டு

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை மும்பை போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், பீகாரில் வசித்து வரும் அவரது தந்தை பாட்னா போலீசில் சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி மீது, ரியா தனது மகனை தற்கொலைக்கு தூண்டியதாகவும் மற்றும் பணமோசடி செய்ததாகவும் கூறி புகார் அளித்துள்ளார்.

தற்போது இந்த வழக்கு சி.பி.ஐ. வசம் வந்துள்ளது. இதற்கு சுப்ரீம் கோர்ட்டும் அனுமதி அளித்ததையடுத்து சி.பி.ஐ. போலீசார் மும்பையில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மும்பை பாந்த்ரா காவல் நிலையம், சுஷாந்த் சிங் வீடு உள்பட பல்வேறு இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று நடிகை ரியா சக்ரபோர்த்தி மீது போதை பொருள் கட்டுப்பாட்டு துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால் சி.பி.ஐ. போலீசார் விசாரணைக்காக மும்பை விரைந்துள்ளனர். தற்போது தனது மகன் சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு ரியா சக்ரபோர்த்தி விஷம் கொடுத்துள்ளார் என அவரது தந்தை கே.கே. சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சுஷாந்த் தந்தை கே.கே. சிங் கூறுகையில், என்னுடைய மகனுக்கு ரியா சக்ரபோர்த்தி விஷம் கொடுதுள்ளார். அவரை கட்டாயம் கைது செய்ய வேண்டும். எனது மகனுக்கு போதைப்பொருள் கொடுத்து, கொலை செய்துள்ளார் என குற்றம் சாட்டியுள்ளார்.