அரசு அதிகாரி வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.3.25 கோடி

கோடிக்கணக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பணம்... வேலூர் மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் இணை முதன்மை பொறியாளர் பன்னீர்செல்வம் வீட்டிலிருந்து கணக்கில் வராத ரூ.3.25 கோடி பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

வேலூர் காந்தி நகரில் உள்ள தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் பணிபுரிந்து வருபவர் பன்னீர்செல்வம். இவரது கட்டுப்பாட்டில் திருவண்ணாமலை, தர்மபுரி, ஓசூர், விழுப்புரம், வாணியம்பாடி ஆகிய 6 மாவட்டங்கள் உள்ளன.

இதனால் அங்கு அமையும் தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்குவது உள்ளிட்ட பல அதிகாரங்கள் இவரிடம் இருந்து வந்ததாக தெரிகிறது. இதை பயன்படுத்தி பன்னீர்செல்வம் லஞ்சம் வாங்கி வந்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிலையில் பன்னீர்செல்வம் முறைகேட்டில் ஈடுபடுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இந்த அடிப்படையில் காந்திநகரில் அமைந்துள்ள இவரின் வாடகை வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். பன்னீர்செல்வத்தின் வீடு ராணிப்பேட்டையில் இருக்கிறது. இவர் லஞ்சம் வாங்கவே இந்த வீட்டை வாடகைக்கு எடுத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து ரூ.3.25 கோடி கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது.

அத்துடன் 3.6 கி தங்கம், 10 கி வெள்ளி, நில ஆவண பத்திரங்கள், கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அங்கு போலீசார் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை எழுப்பி உள்ளது.