ரூ. 3.5 கோடிக்கு ஏலம் போய் உலக சாதனை படைத்த "டபுள் டைமண்ட்"

ரூ.3.5 கோடிக்கு ஏலம் போன ஆடு... ஸ்காட்லாந்தில் நடந்த ஏலம் ஒன்றில் டெக்செல் வகை ஆடு ஒன்று இந்திய மதிப்பில் ரூ. 3.5 கோடிக்கு ஏலம் போய் உலக சாதனை படைத்துள்ளது.

ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள கிளாஸ்கோ அருகேயுள்ள லானார்க் என்ற இடத்தில் ஒவ்வொரு அண்டும் ஆடுகள் ஏலம் நடைபெறுவது வழக்கம். இங்கிலாந்தின் மான்செஸ்டரைச் சேர்ந்த சார்லி போடன் என்பவரால் வளர்க்கப்பட்ட ’டபுள் டைமண்ட்’ என்று பெயரிடப்பட்ட ஆட்டுக்குட்டியும் இந்த ஆண்டு ஏலத்துக்கு கொண்டுவரப்பட்டது. 6 வயதுடைய இந்த ஆடு நெதர்லாந்து அருகேயுள்ள சிறிய தீவைச் சேர்ந்த டெக்சல் இனத்தைச் சேர்ந்ததாகும்.

டபுள் டைமண்ட் ஆட்டின் அடிப்படை விலை 10 ஆயிரம் பவுண்டு என நிர்ணயிக்கப்பட்டது. இந்த ஆட்டுக்குட்டியை ஏலம் எடுக்க ஆளாளுக்கு போட்டி போட்டனர். இதனால், ஆட்டின் விலை ராக்கெட் வேகத்தில் எகிறயது. இறுதியில் டபுள் டைமண்ட் ஆட்டு குட்டி 3,67,000 பவுண்டுக்கு ஏலம் போனது. இதன் இந்திய மதிப்பு 3.5 கோடி ஆகும்.

நெதர்லாந்து அருகேயுள்ள சிறிய தீவைச் சேர்ந்த டெக்சல் வகை செம்மறி ஆடுகள், ஸ்காட்லாந்து நாட்டின் அதிகளவு குளிரைத் தாங்கும் வகையில் உடலமைப்புக் கொண்டவை. மேலும் இனவிருத்திக்கு வித்தாக இருப்பதால் இந்த ரக ஆட்டுக்கிடாவை அதிக தொகை கொடுத்து மக்கள் ஏலம் எடுப்பதாக பிரிட்டிஷ் டெக்சல் ஆடுகள் வளர்ப்பு மையம் தெரிவித்துள்ளது.

ஆட்டின் சொந்தக்காரரான சார்லி போடன் ‘டபுள் டைமண்ட்’ என்று எந்த நேரத்தில் பெயர் வைத்தார் என்று தெரியவில்லை. வைரத்தை போலவே விலை கொண்டதாக மாறியுள்ளது இந்த ஆட்டுக்குட்டி.