சசிகலா முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு இல்லை

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். வழக்கு விசாரணையில் சுப்ரீம் கோர்ட்டு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிதத்தை அடுத்து அவர்களின் தண்டனை காலம் அடுத்த ஆண்டு (2021) பிப்ரவரி மாதம் நிறைவடைகிறது. சசிகலா தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை செலுத்தினால் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 27-ந் தேதி விடுதலை ஆவார் என்று பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறை நிர்வாகம் கூறியது.

ஆனால் அவர் தனக்கு உள்ள விடுமுறை நாட்களை பயன்படுத்தி முன்கூட்டியே விடுதலை ஆகலாம் என்று தகவல் வெளியாகி வந்தது. அதனால் அபராதத்தொகையை செலுத்த சசிகலாவின் வக்கீல்கள் ஏற்பாடு செய்து வருகிறார்கள். ஏதாவது வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களை முன்கூட்டியே விடுதலை செய்ய பரிசீலிக்கலாம் என்று கர்நாடக அரசு கடந்த 2016-ம் ஆண்டு உத்தரவிட்டது.

அதன்படி பார்த்தால், சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு விடுமுறை நாட்கள் வழங்கும் விதிமுறை பொருந்தாது என்று சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி கூறியுள்ளார். இதனால் சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் கூறும்போது, கர்நாடக அரசின் சிறை விதிமுறைகள்படி, ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றவர்களுக்கு விடுமுறை நாட்கள் வழங்கப்படுவது இல்லை. அதனால் சசிகலா முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு இல்லை. சசிகலா அபராதத்தை செலுத்தினால் வருகிற ஜனவரி 27-ந் தேதி விடுதலை செய்யப்படுவார் என்று பெங்களூரு சிறை நிர்வாகமே தெளிவாக கூறியுள்ளது என்றார்.