ஹாங்காங்கில் பள்ளி மாணவர்கள் எந்தவொரு அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபட தடை

கடந்த 1997-ம் ஆண்டு இங்கிலாந்து தனது பிடியில் இருந்த ஹாங்காங் சீனாவின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்பட்டது. ஒரே நாடு இரண்டு அமைப்புகள் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒப்படைக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் படி, சில உரிமைகளை ஹாங்காங் மக்களுக்கு வழங்குவதற்கு குறைந்தது 50 ஆண்டுகளுக்கு சீனா உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

ஆனால் சீனா ஹாங்காங் மக்களின் தன்னாட்சியை பறிக்கிற வகையில் நடந்து வருகிறது. சமீபத்தில் ஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய பாதுகாப்பு சட்டம் ஒன்றை சீனா அமல்படுத்தி உள்ளது. இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த சட்டத்தின் தேசிய சீன பாதுகாப்பு அலுவலகம் ஹாங்காங்கில் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது.

தற்போது ஹாங்காங்கில் பள்ளி மாணவர்கள் எந்தவொரு அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன்படி, மாணவர்கள் பாடல்கள் பாடுவது, கோஷங்கள் போடுவது, வகுப்பறைகளை புறக்கணிப்பது போன்ற எந்தவொரு நடவடிக்கையிலும் இனி ஈடுபட முடியாது என பிரதேச கல்வி மந்திரி கெவின் யியுங் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் ஹாங்காங் நூலகங்களில் இருந்து ஜனநாயக ஆதரவு புத்தகங்கள் அகற்றப்பட்டது. தற்போது மாணவர்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த இந்த உத்தரவுகளால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.