சென்னை: நடிகை விஜயலட்சுமி சீமான் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிவிட்டதாகவும், கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 10 -ம் தேதி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் சீமான் ஆஜராகவில்லை. பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதால் வழக்கில் ஆஜராக அவகாசம் வழங்கும்படி சீமான் தரப்பில் கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டது.
இதை தொடர்ந்து கடந்த 12ஆம் தேதி காவல் நிலையத்தில் ஆஜராவார் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அப்போதும் சீமான் ஆஜராகவில்லை. சீமானுக்கு பதிலாக வளசரவாக்கம் காவல்நிலையத்தில் நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சங்கர் ஆஜரானார்.இதனை தொடர்ந்து நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு 2-வது முறையாக போலீசார் சம்மன் அனுப்பினர்
இதையடுத்து இச்சூழலில் யாரும் எதிர்பாக்காத வகையில் நடிகை விஜயலட்சுமி சீமான் மீது கொடுத்த புகார்களை திரும்ப பெற்று பெங்களூரு திரும்பினார். நடிகை விஜயலட்சுமி புகாரை வாபஸ் பெற்றாலும் சீமான் 18-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை வளசரவாக்கம் போலீசார் விளக்கம் அளித்தனர்.
இந்த நிலையில் விஜயலட்சுமி அளித்த புகார் மனு இன்னும் முடித்து வைக்கப்படாத நிலையில், சீமான் இன்று வளசரவாக்கம் காவல்நிலையத்தில் இன்று ஆஜராகிறார். விஜயலட்சுமி அளித்த புகார் மனுவை வாபஸ் பெறப்பட்ட நிலையில் இன்னும் நீதிமன்றத்திற்கு அனுப்பிவைக்கப்படாததால் , சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. எனவே அதனடிப்படையில் சீமான் ஆஜராக உள்ளதாக கூறப்படுகிறது.