படப்பிடிப்பு, திரையரங்குகள் திறக்க அனுமதிக்க வாய்ப்பு இல்லை

தமிழ்நாட்டில் திரைப்படப் படப்பிடிப்பு தொடங்கவும் திரையரங்குகளைத் திறக்கவும் தற்போதைக்கு வாய்ப்பு இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனால் திரைப்படத் தொழிலாளர்கள் நிலை மிகவும் பரிதாபகரமாக மாறிவருகிறது.

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் சில தளர்வுகளுடன் பொது முடக்கம் அமலில் உள்ளது. படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத நிலையில், சினிமாவை நம்பியுள்ள தொழிலாளா்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனா். திரையரங்குகளும் இயங்காததால் படங்கள் வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவால் திரையரங்குகளில் படங்கள் வெளியாவது குறித்து தெளிவான நிலை இல்லாததால் நேரடியாக ஓடிடி தளங்களில் படங்களை வெளியிடத் தயாரிப்பாளர்கள் முயன்று வருகிறார்கள். கடந்த 4 மாதங்களாக ஊரடங்கு உத்தரவால் அதிக இழப்புகளைச் சந்தித்துள்ளார்கள் திரையரங்கு உரிமையாளர்கள். எனவே ஊரடங்குத் தளர்வில் திரையரங்குகளை உரிய விதிமுறைகளுடன் இயங்க அனுமதிக்க வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் அரசிடம் கோரிக்கை வைத்தார்கள்.

நாள்தோறும் குறைந்தபட்சம் 2 காட்சிகளுக்காவது அனுமதியளிக்க வேண்டும் என்பது அவர்களுடைய கோரிக்கையாக இருந்தது. ஆகஸ்ட் 1 முதல் திரையரங்குகள் மீண்டும் இயங்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியானதால் அரசின் அறிவிப்பைத் திரையரங்கு உரிமையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள்.

மூன்றாவது கட்ட பொது முடக்கத் தளா்வுக்கான விதிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் அறிவித்தது. பள்ளி, கல்லூரிகள், மெட்ரோ ரயில் சேவை, திரையரங்குகள், நீச்சல் குளங்கள், மதுக்கூடங்கள், அருங்காட்சியகங்கள் உள்ளிட்டவற்றை ஆகஸ்ட் 31 வரை திறக்கக் கூடாது என்று அறிவுறுத்தியிருந்தது.

பிறகு, தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். திரையரங்குகள் இயங்க அனுமதி இல்லை எனத் தமிழக அரசு தெரிவித்தது. இதனால் தமிழ்த் திரையுலகம் ஏமாற்றமடைந்துள்ளது.

இந்நிலையில், கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாட்டில் திரைப்படப் படப்பிடிப்பு தொடங்கவும் திரையரங்குகளைத் திறக்கவும் தற்போதைக்கு வாய்ப்பு இல்லை. சின்னத்திரை படப்பிடிப்பு நடைபெற உள்அரங்கு போதுமானது. ஆனால் திரைப்படப் படப்பிடிப்பு வெளிப்புறங்களில் நடைபெறும்போது மக்கள் கூட்டம் கூட வாய்ப்புள்ளது என்றார்.