சாத்தான்குளம் வழக்கில் எஸ்.ஐ., ரகு கணேஷ் கைது செய்யப்பட்டார்

சாத்தான்குளத்தில் தந்தை , மகன் மரண வழக்கில் எஸ்.ஐ. ரகு கணேஷை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.

துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (63). இவரது மகன் பெனிக்ஸ் (31). கடந்த ஜூன் 19 இரவு 9 மணிக்கு ரோந்து வந்த உள்ளூர் போலீசார், ஊரடங்கு காலத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து, கடையை திறந்து வைத்திருப்பதாகக் கூறி, கடைகளை மூடுமாறு கூறியதில் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து தந்தை, மகன் ஆகியோரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று கொடூரமாக தாக்கியுள்ளனர்.

இருவர் மீதும் வழக்கு பதியப்பட்டு, கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். ஜூன், 22ல் பெனிக்ஸ், மறுநாள் ஜெயராஜ் இறந்தனர். சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இன்று சாத்தான்குளம் போலீஸ் நிலைய பெண் காவலரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து எஸ்.ஐ.கள், ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், போலீசார், முருகன், முத்துராஜ் உள்ளிட்ட 6 போலீசார் மீது 4 பிரிவுகளின் கீழ் கொலை வழக்காக பதிவு செய்துள்ளனர். இதில் ரகு கணேஷ் கைது செய்யப்பட்டார்.