ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலுக்கு சிவஞானம் கண்டனம்

ஊடக சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல்... ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் ஊடக சுதந்திரத்துக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் என வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத மரக்கடத்தல் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற முல்லைத்தீவு ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு முறிப்பு பிரதேசத்தில் நேற்றையதினம் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து குறித்த பிரதேசத்துக்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களான சண்முகம் தவசீலன், கணபதிப்பிள்ளை குமணன் ஆகியோர் மீது குறித்த பகுதியில் சட்டவிரோத மரக்கடத்தலில் ஈடுபடும் நபர்களினால் கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்களின் புகைப்படக்கருவிகள் என்பன பறிக்கப்பட்டு புகைப்படம் மற்றும் காணொளிகள் என்பன அழிக்கப்பட்டிருந்தன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான செயற்பாட்டை தாம் வன்மையாக கண்டிப்பதோடு, இது ஊடக சுதந்திரத்துக்கு விடுக்கப்பட்ட பாரிய அச்சுறுத்தல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே குறித்த தாக்குதலை மேற்கொண்டவர்களை பொலிஸார் உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும் எனவும் அவர் அந்த அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளார்.