கும்பகோணத்தில் சிறுதானிய உணவு திருவிழா... மாணவர் உற்சாகமாக பங்கேற்பு

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் சிறுதானிய உணவு திருவிழா நடந்தது.

இந்திய அரசு நேருயுவகேந்திரா தஞ்சாவூர் மற்றும் விவேகானந்தா கலாம் யூத் கிளப் ஒருங்கிணைப்பில் கோநகர் ஸ்கூல் ஆஃப் நர்சிங் இணைந்து மாபெரும் சிறுதானிய உணவு திருவிழாவை கும்பகோணத்தில் நடத்தின.

நிகழ்ச்சிக்கு நேருயுவகேந்திராவின் துணை இயக்குநர் திருநீலகண்டன் தலைமை வகித்தார். கோநகர்நாடு நர்சிங் கல்லூரி முதல்வர் மைதிலி சக்திவேல் முன்னிலை வகித்தார். கும்பகோணம் ரெட்கிராஸ் துணைத்தலைவர் ரொசாரியோ வாழ்த்துரை வழங்கினார். கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் பூர்ணிமா விழாவை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

கோவை பாரதியார் பல்கலை கழக ஆட்சி பேரவை குழு உறுப்பினர் டாக்டர் ஆதலையூர் சூரியகுமார் சிறுதானியங்கள் பற்றி சிறப்புரையாற்றினார். விழாவில் கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி, சோளம், தினை, சம்பா, கருப்பு கவுணி, கடலை போன்ற சிறுதானிய உணவுகள் செய்து பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்டது. பல்வேறு சிறுதானிய வகைகள் அதன் பயன்கள் குறித்து பார்வையாளர்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

தொடர்ந்து கும்பகோணம் ரெட்கிராஸ் சார்பில் கும்பகோணம் அரசு பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கோட்டாட்சியர் பூர்ணிமா விருது வழங்கி கௌரவித்தார். இறுதியாக கோரமண்டல் இரயில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஏற்பாடுகளை கும்பகோணம் விவேகானந்தா கலாம் யூத் கிளப் தலைவர் கணேசன் செய்திருந்தார். விழாவில் பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள், நேருயுவகேந்திரா தேசிய இளையோர் தொண்டர்கள், ரெட்கிராஸ் அமைப்பினர்கள், தனியார் தொண்டு நிறுவன உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.