முட்டைகளை இறக்குமதி செய்ய சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்க தலைவர் வலியுறுத்தல்

இலங்கை; முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டும்... இலங்கையில் முட்டைகளின் விலைகளை குறைப்பதாயின் உடனடியாக முட்டைகளை இறக்குமதியை செய்ய வேண்டும் என்று அகில இலங்கை சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சமீபகாலமாக சில வியாபாரிகள் முட்டையை 70 ரூபாய்க்கு விற்பனை செய்வதால் முட்டை விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. இந்நிலையில், முட்டைகளின் விலை அதிகரிப்பால் கற்பிணித்தாய்மார்கள், சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் வறியவர்கள் தமக்கு தேவையான புரதச்சத்துக்களைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளார்.


மேலும், முட்டை விலை அதிகரிப்பை போன்று அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகளும் அதிகரித்து செல்கின்றது.

இதன் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், இந்த நிலை தொடர்ந்தால் நாட்டில் மீண்டும் மக்கள் போராட்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இந்த நிலை தொடராமல் இருக்க முட்டைகளை இறக்குமதி செய்து விலைகளை உடனடியாக குறைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், முட்டை மற்றும் கோழி இறைச்சிக்கான விலை அதற்கான செலவுகள் தொடர்பில் விரைவில் ஆய்வுகளை மேற்கொள்ள தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக, நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.