எஸ்.பி.பி.,யின் சிகிச்சை கட்டணம் குறித்து மகன் சரண் விளக்கம்

சிகிச்சை கட்டணம் குறித்து விளக்கம்... கடந்த 25ம் தேதி காலமான பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு சிகிச்சை கட்டணம் தொடர்பாக அவரது மகன் எஸ்.பி.பி.சரண் விளக்கமளித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக, சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னணி பாடகர், எஸ்.பி.பி., இம்மாதம், 25ம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார். அவர் சிகிச்சை பெற்றதற்கான கட்டணத்தை, எஸ்.பி.பி., குடும்பத்தினரால் கட்ட முடியாமல் போனதால், துணை ஜனாதிபதி உதவியுடன், எஸ்.பி.பி., உடல் பெறப்பட்டதாக தகவல் பரவியது.

இதனை எஸ்.பி.பி. மகன் சரண் திட்டவட்டமாக மறுத்திருந்தார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக எஸ்.பி.பி. சரண் மற்றும் எம்ஜிஎம் மருத்துவமனை நிர்வாகிகள் இன்று கூட்டாக நிருபர்களை சந்தித்து சிகிச்சை கட்டணம் தொடர்பாக விளக்கமளித்தனர்.

அப்போது சரண் கூறியதாவது; அப்பாவுக்கான மருத்துவ செலவு கட்டணம் செலுத்துவதில் எந்த பிரச்னையும் இருந்ததில்லை. சிகிச்சை கட்டணம் குறித்து வெளியான தகவல் தவறானது. சிகிச்சைக்கு நாங்களும், மருத்துவ காப்பீடு மூலமும் அவ்வபோது கட்டணம் செலுத்தி வந்தோம். அவர் மறைவுக்கு பின்னர் சிகிச்சை கட்டணம் பற்றி கேட்ட போது வேண்டாம் என மருத்துவமனை கூறிவிட்டது.

மருத்துவமனை தலைவர் பணம் வாங்க மறுத்து உடலை பத்திரமாக அனுப்பி வைத்தார். எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் என அரசு கூறியிருந்தது. கட்டணத்தை செலுத்த யாருடைய உதவியையும் நாடவில்லை. கொரோனா காரணமாக அப்பா மரணமடையவில்லை. நுரையீரல் தொற்று காரணமாகவே உயிரிழந்தார். எதிர்பாராத மரணம் என்பதால், அதனை ஜீரணிக்க நீண்ட காலமாகும். இவ்வாறு அவர் கூறினார்.