எஸ்.எஸ்.எல்.சி மாணவர்களுக்காக சிறப்பு பஸ்...கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம்!

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுத உள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வசதிக்காக மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து மேலாண்மை இயக்குனர் கோ.கணேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு வருகிற 15-ந்தேதி தொடங்க உள்ளது. தேர்வு எழுத மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று முதல் 13-ந்தேதி வரை வழங்கப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில், மாநகர போக்குவரத்து கழக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுத உள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வசதிக்காக 63 வழித்தடங்களில் 109 சிறப்பு பஸ்கள் மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்படுகின்றன.

இந்த சிறப்பு பஸ்களில் மாணவர்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம். ஆசிரியர்கள் பயணச்சீட்டு வாங்க வேண்டும். பிற பயணிகள் பஸ்களில் பயணம் செய்ய அனுமதி இல்லை. இந்த சிறப்பு பஸ்களை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அறிந்துகொள்ள ஏதுவாக பஸ்சின் முகப்பில் பள்ளி கல்வித்துறை என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. காலை 9 மணியளவில் புறப்பட்டு, பின்னர் மாலை 4 மணிக்கு மறுமுனையில் இருந்து புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த பஸ்களில் பயணம் செய்யும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். தனிநபர் இடைவெளியை பின்பற்றும் பொருட்டு பஸ்களில் 24 பேர் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். மேலும் பஸ்களில் பின்புறமாக ஏறி, முன்புறமாக இறங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.