மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்

தஞ்சாவூர்: மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது தஞ்சாவூரங மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்றவர்களுக்கு, பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இதுநாள் வரை மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாதவர்களுக்காக சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு 2 கோட்ட அளவில் நடைபெறவுள்ளது.

இதில் இன்று கும்பகோணம் KMSS வளாகம் பேருந்து நிலையம் அருகிலும், 25ம் தேதி பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள கிராம சேவை கட்டிடத்தில் நடைபெற உள்ளது.

இம்முகாமில் எலும்பு முறிவு மருத்துவர், காது மூக்கு தொண்டை பிரிவு மருத்துவர், மன நல மருத்துவர் மற்றும் கண் மருத்துவர் ஆகிய அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத் திறனாளிகளை பரிசோதனை செய்து மருத்துவச்சான்று வழங்க உள்ளார்கள். மேற்படி மருத்துவ அலுவலர் வழங்கும் சான்றிதழின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுநாள் வரை அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் 6 புகைப்படத்துடன் இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் வந்து கலந்துகொண்டு பயன்பெறலாம். இதுநாள்வரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு (UDID) விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகள் மேற்படி முகாமில் மேற்கூறிய ஆவணங்களுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகலுடன் வந்து விண்ணப்பித்து பயன்பெறலாம்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மேற்கண்ட தேதிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் உரிய ஆவணங்களுடன் இதுநாள் வரை மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் நேரில் வந்து கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையான அட்டை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.