வேதாரண்யம் மீனவர்களை தாக்கி வலைகளை பறித்த இலங்கை மீனவர்கள்

இலங்கை மீனவர்கள் அட்டூழியம்... வேதாரண்யம் மீனவர்களைத் தாக்கி அவர்களின் வலைகளை இலங்கை மீனவர்கள் பறித்துக்கொண்டு விரட்டியடித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோடியக்கரை தென்கிழக்கு நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்த 4 மீனவர்களை தாக்கி 600 கிலோ எடை உள்ள வலைகளை இலங்கை மீனவர்கள் பறித்துச் சென்றனர். ஆறுகாட்டுத்துறை கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவருடைய பைபர் படகில் கோபி, சுகுமாரன், வேலவன், காளிதாஸ் ஆகிய 4 பேரும் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது இரண்டு படகுகளில் வந்த இலங்கை மீனவர்கள் ஆறு பேர் வீச்சருவாள், இரும்பு ராடு போன்ற ஆயுதங்களை கொண்டு தாக்கியதில் கோபியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து அவர் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இலங்கை மீனவர்கள் 20 லிட்டர் டீசல் ஜிபிஎஸ் கருவி, செல்போன்கள் ஆகியவற்றையும் பறித்து சென்றதாக தமிழக மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுகுறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.