ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல்

ராமேஸ்வரம்: மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல்... ராமேஸ்வரம் மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தி விரட்டியடித்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று முன்தினம் காலை பாக் ஜலசந்தி கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றனர். மாலை மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு 2 கன்போட் ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களின் விசைப்படகுகளை தடுத்து நிறுத்தினர்.

பின்னர் படகின் அருகில் சென்று மீனவர்களை தாக்கி, அவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். ஐந்துக்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இலங்கை கடற்படையினரின் அத்துமீறிய செயலால் அச்சமடைந்த மீனவர்கள், அங்கிருந்து வேறு பகுதிக்கு படகுகளை ஓட்டிச் சென்று, இரவில் மீன் பிடித்து நேற்று காலை ராமேஸ்வரம் திரும்பினர். இதனால் மீன்பாடு மிகவும் குறைவாக இருந்தது.