இந்திய கடற்படை கப்பலுக்கு இலங்கை அதிகாரிகள் வரவேற்பு

கொழும்பு: உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வந்த இந்திய கடற்படை கப்பலை இலங்கை அதிகாரிகள் வரவேற்றனர்.

இந்திய கடற்படையின் INS டெல்லி கப்பல் இலங்கையின் வடகிழக்கு பகுதியில் உள்ள திரிகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வந்த இந்திய கடற்படை கப்பலை இலங்கை அதிகாரிகள் வரவேற்றனர்.

இந்த கப்பல் 390 பணியாளர்களுடன் இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல் ஒன்று இலங்கை சென்றுள்ளது.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நல்லுறவு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில், இரு நாட்டு கடற்படை வீரர்களையும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

இரு நாடுகளுக்கும் இடையிலான கடற்படை சவால்களை சமாளிக்கும் வகையில் இதுபோன்ற கடற்படை பயிற்சிகள் நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.