ஸ்டார்பக்ஸ் நிறுவன முன்னாள் மேலாளருக்கு ரூ.200 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு

அமெரிக்கா: நீதிமன்றம் உத்தரவு... அமெரிக்காவில் இனவெறி புகாருக்கு உள்ளாகி வேலையை இழந்த ஸ்டார்பக்ஸ் நிறுவன முன்னாள் மேலாளருக்கு 200 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2018ம் ஆண்டு, பிலடெல்பியா நகரிலுள்ள ஸ்டார்பக்ஸ் காபி ஷாப்புக்கு வந்த கருப்பின இளைஞர்கள் 2 பேர் வெகுநேரமாகியும் எதுவும் ஆர்டர் செய்யாததால் அவர்களுக்கும் அங்கிருந்த ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின் அந்த இரு இளைஞர்களையும் போலீசார் கைது செய்தனர். இதனால் இனவெறி புகாருக்கு உள்ளான ஸ்டார்பக்ஸ் நிர்வாகம், அந்த சூழலை திறம்பட கையாளவில்லை என கூறி பிராந்திய மேலாளர் ஷானோன் பிலிப்ஸை உடனடியாக பணிநீக்கம் செய்தது.

வெள்ளை இனத்தை சேர்ந்தவர் என்பதால் மட்டுமே தான் பணிநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறி ஷானோன் பிலிப்ஸ் தொடர்ந்த வழக்கில், அவருக்கு 200 கோடி ரூபாய் இழப்பீடு வழங்குமாறு ஸ்டார்பக்ஸ் நிறுவனத்திற்கு நியூஜெர்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.