ஸ்டெர்லைட் வன்முறை: விசாரணைக்கு ஆஜராகும்படி நடிகர் ரஜினிகாந்துக்கு சம்மன்

கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

இதுவரை 23 கட்டங்கள் விசாரணை நடைபெற்றுள்ள நிலையில், 24-வது கட்ட விசாரணை தூத்துக்குடியில் உள்ள விருந்தினர் மாளிகை முகாம் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. விசாரணை ஜனவரி 19-ம் தேதி தொடங்க உள்ளது.

இந்த விசாரணைக்கு ஆஜராகும்படி நடிகர் ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் பின்னணியில் சமூக விரோதிகள் இருப்பதாக ரஜினி கூறியிருந்தார். இதுதொடர்பாக அவரிடம் ஆணையம் விசாரணை நடத்த உள்ளது.

இதற்கு முன்பு ரஜினிக்கு சம்மன் அனுப்பப்பட்டபோது அவர் நேரில் ஆஜராகவில்லை. ரஜினிகாந்த் நேரில் ஆஜராகாதது குறித்து விசாரணை ஆணையத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.