நாக்பூரில் சிறுவனை கடித்து குதறி கொன்ற தெருநாய்கள்

நாக்பூர்: சிறுவனை கடித்து குதறிய தெரு நாய்கள்... மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள காடோல் நகரில், ஐந்து வயது சிறுவன் தெருநாய்கள் கடித்துக் குதறியதில் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

காடோல் நகரின் தந்தோலி பகுதியில் ஐந்து வயது சிறுவன் விராஜ் ராஜு ஜெய்வர், தனது அக்காவுடன் நடைப்பயிற்சிக்கு சென்றிருந்தபோது, திடீரென அவர்களை தெருநாய்கள் சுற்றி வளைத்தன. இதைப் பார்த்த அவனது அக்கா, உதவிக்காக அலறத் தொடங்கினார். ஆனால் அதிகாலையில் அப்பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் யாரும் உதவிக்கு வரவில்லை.

சிறுவனைக் கடித்துக் குதறிய தெருநாய்கள், கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு கட்டிடத்திற்குள் அவனை இழுத்துச் சென்றன. உடனடியாக அப்பகுதிக்கு வந்த பெற்றோரும் அக்கம்பக்கத்தினரும் நாய்களை விரட்டிவிட்டு அச்சிறுவனை மீட்டனர். நாய்கள் குதறியதால் படுகாயமடைந்திருந்த சிறுவனை அருகில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

5 வயது சிறுவனை தெரு நாய்கள் கடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.