வந்தவாசியில் பலத்த காற்று... வேரோடு சாய்ந்து விழுந்த மரத்தால் கார் நொறுங்கியது

வந்தவாசி: மரம் வேரோடு சாய்ந்து கார் மீது விழுந்த விபத்தில் கார் முற்றிலும் நொறுங்கி சேதமடைந்தது. தொடர்ந்து காரை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

வந்தவாசியில் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை சுற்றியுள்ள பல்வேறு கிராமப்புற பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அதிக அளவில் காற்று வீசியதால் வந்தவாசி பகுதியில் இரவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இந்நிலையில் வந்தவாசி மேல்மருவத்தூர் சாலை சென்னாவரம் கிராமம் அருகே சாலை ஓரத்தில் இருந்த மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதில், சாகுல் என்பவரின் கடையின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் முற்றிலும் நொறுங்கியது. தகவல் அறிந்த நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் சென்னாவரம் கிராமத்தில் மரம் விழுந்ததில் மின்கம்பிகள் அறுந்து கீழே விழுந்தது. மேலும் வந்தவாசியை சுற்றியுள்ள மும்முனி, ஆயிலவாடி பிருதூர் கல்லாங்குத்து உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மரங்கள் வேரோடு சாலையில் சாய்ந்தது. அதை அகற்றும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர்.