ஜப்பானில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நில நடுக்கம்

ஜப்பானின் மிகப்பெரிய தீவுகளில் ஹோன்சு தீவும் ஒன்று. இந்நிலையில், ஹோன்சு தீவின் கிழக்குப் பகுதியில் உள்ள மியாகி நகரில் நேற்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 40 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஜப்பான் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் மியாகி நகர் மட்டுமின்றி அதனை சுற்றி உள்ள 17 நகரங்களிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட 15 நிமிடத்துக்குள் அடுத்தடுத்து 3 முறை பயங்கர நிலநடுக்கங்களாக ஏற்பட்டது. இந்த நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவுகோலில் 4.1, 4.2 மற்றும் 5.0 புள்ளிகளாக பதிவாகியது.

முதலில் ஏற்பட்டநில நடுக்கத்தால் வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. உடனே பீதியடைந்த மக்கள் அலறியடித்து வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். அதன்பின், அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் வீடுகளுக்குள் செல்ல பயந்து பல மணி நேரமாக வீதிகளிலும், திறந்தவெளி மைதானங்களிலும் இருந்தனர்.

அடுத்தடுத்து ஏற்பட்ட 4 சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் மக்கள் பீதியடைந்தனர். இருப்பினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. மேலும் இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.