பாமக போராட்டத்தால் சென்னையில் புறநகர் ரயில் சேவைகள் ரத்து

புறநகர் ரயில் சேவைகள் ரத்து... சென்னையில் பாமகவினர் போராட்டம் எதிரொலியாக புறநகர் ரயில் சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பாமக தொடர் போராட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி, இந்த போராட்டம் இன்று காலை சென்னையில் தொடங்கியது. இந்த போராட்டம் வரும் 4-ம் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது.

இன்று காலை சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மறியலில் ஈடுபட்டு வரும் பாமகவினரை போலீசார் தடுத்து கைது செய்து வருகின்றனர்.

இன்று காலையில் புறநகர் மின்சார ரயில்களை மறித்து பாமகவினர் போராட்டம் நடத்தினர். இதனால் புறநகர் மின்சார ரயில் சேவையும் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

அப்போது சிலர் மின்சார ரயில் மீது கற்களை வீசி திடீர் தாக்குதல் நடத்தினர். இதனால், ரயிலில் இருந்த பயணிகள் அலறியடித்து ஓட்டம் எடுத்தனர்.

இதேபோன்று, ராணிப்பேட்டை, வாலாஜா, சோளிங்கர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாமக போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் பாமகவினர் தொடர் போராட்டம் காரணமாக புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை கடற்கரை - தாம்பரம் இடையேயான ரயில் சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், அலுவலகம் செல்வோர், தனியார் நிறுவனத்தில் வேலைக்கு செல்வோர் என பலரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.