தாஜ்மஹால் பொதுமக்கள் பார்வைக்காக இன்று திறக்கப்படாது என அறிவிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளதால், கடந்த 1-ந்தேதியில் இருந்து ஊரடங்குடன் கூடிய அன்லாக்-2-ஐ அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாட்டில் உள்ள நினைவுச் சின்னங்கள் மற்றும் புராதான இடங்கள் வருகிற ஜூலை 6-ந்தேதி (இன்று) முதல் திறக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் இன்று முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

பொதுமக்கள் மாஸ்க் அணிந்து, தாஜ்மஹால் உள்ள தூண்கள் உள்பட எதையும் தொடாமல் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது ஆக்ராவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் தாஜ்மஹால் திறக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆக்ராவில் உள்ள புராதான இடங்களும் திறக்கப்படாது என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்க்கப்பட்டபின் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.