தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று மாலை டெல்லி பயணம்

சென்னை: தமிழகத்தின் பல இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக இன்று மாலை டெல்லி செல்கிறார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக பிரமுகர்கள் வீடுகளில் வெடிகுண்டுகள் வீசப்பட்ட சம்பவம் மிக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து இந்நிலையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று மாலை சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார். அவர் நாளை, உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகளை சந்தித்து இந்த சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை நடத்துவார் என கூறப்படுகிறது.

ஏற்கெனவே மத்திய உள்துறை அமைச்சகம் இந்த சம்பவம் பற்றி தமிழக அரசிடம் விளக்கம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் இந்த சம்பவங்கள் குறித்து கவர்னர் பேசுவார் என்றும் மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் உள்துறை மந்திரியிடம் ஆலோசனை நடத்துவார் எனவும் எதிர்பார்கப்படுகிறது.

மேலும் கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லியில் இரண்டு நாட்கள் தங்கியிருந்து சென்னை திரும்புவார் என்றும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.