தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு கொரோனா

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமுலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று ஒரேநாளில் 2,141பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 52,334 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,017ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்த கொரோனா தடுப்பு ஆலோசனையில் கே.பி.அன்பழகன் பங்கேற்றிருந்தார். இவருடன் ஜெயக்குமார், காமராஜ் உள்ளிட்ட அமைச்சர்களும் ஆலோசனையில் பங்கேற்றிருந்தனர்.

தற்போது கே.பி.அன்பழகனுக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் அவருக்கு மணப்பாக்கம் மியாட் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.