விருப்பமில்லா திருமணத்தால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

திருவேற்காடு அடுத்த பெருமாளகரம் பகுதியை சேர்ந்த தினேஷ்(வயது 23) தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த வினிஷால்(19) என்ற பெண்ணுடன் கடந்த அக்டோபர் மாதம் 29-ந் தேதி திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் தினேஷ் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார்.

இந்நிலையில் வினிஷாலின் தந்தை மகளின் செல்போனில் தொடர்பு கொண்ட போது, நீண்ட நேரமாக செல்போனை அவர் எடுக்காததால் சந்தேகமடைந்தார். உடனே அவர் மகளின் வீட்டிற்கு விரைந்து சென்றார். அப்போது கதவு உள்தாழ்ப்பாள் போட்டு இருந்ததால் கதவை தட்டினார். கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகமடைந்தார்.


பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, வினிஷால் தூக்குப்போட்டு இறந்த நிலையில் இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் உடனடியாக திருவேற்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இறந்து கிடந்த வினிஷால் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், வினிஷால் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்த நிலையில், அவருக்கு விருப்பமில்லாமல் திருமணம் நடைபெற்றதாகவும், இதனால் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் தெரிகிறது. இதன் காரணமாக இளம்பெண் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் திருமணமாகி ஒரு மாதமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.