திருமணம் ஆன 10 நாட்களில் இளம்பெண் தற்கொலை - போலீசார் விசாரணை

திருமணம் ஆன 10 நாட்களில் இளம்பெண் தற்கொலை செய்துள்ளார். இதற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள வெள்ளப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினசாமி. இவரது மகன் முத்துசாமி. இவருக்கும், புதுகுடியிருப்பு கிராமத்தை சேர்ந்த ராஜபாண்டி மகள் பவித்ராவுக்கும்(வயது 20) கடந்த 10 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பவித்ரா தனது தந்தை வீட்டிற்கு விருந்துக்கு வந்திருந்தார். ஆனால் அங்கு பவித்ரா விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

இதைதொடர்ந்து அவரை உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.

திருமண பந்தத்தில் விருப்பம் இல்லாமல் அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்த தகவலின் பேரில் சாயல்குடி இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.