ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த வாலிபர் தற்கொலை

ஆன்லைன் விளையாட்டுகளில் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அவர்கள் பணத்தை இழந்துள்ளனர். அந்த வகையில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் கோவையில் நேற்று ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். அந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம் (வயது 28). இவருக்கு திருமணமாகி சுகன்யா என்ற மனைவியும், வர்ஷன் (வயது 5) என்ற மகனும் உள்ளனர். இவர் தனது நண்பருடன் சேர்ந்து கணினி பழுது பார்க்கும் மையம் நடத்தி வந்தார். ஆனால் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். அதை அவருடைய மனைவி பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் அதை பொருட்படுத்தாமல் அவர் தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாடி வந்ததாக தெரிகிறது.

இதனால் அவருடைய மனைவி சுகன்யா கடந்த 15 நாட்களுக்கு முன்பு தனது குழந்தையுடன் தாயாரின் வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த ஜீவானந்தம் தனது தொழில் பங்குதாரர்களுக்கு கொடுக்க வைத்திருந்த ரூ.20 ஆயிரத்தை வைத்து ஆன்லைனில் ரம்மி விளையாடி உள்ளார். அதில் 20 ஆயிரம் பணத்தை மொத்தமாக இழந்துள்ளார்.

இதனால் ஆத்திரத்தில் தனது செல்போனை வீசி எறிந்து உடைத்துள்ளார். இதையடுத்து அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.