சென்னையில் பத்து மடங்கு மழை பெய்ய வாய்ப்பு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

சென்னை ஐ.ஐ.டி.யின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் காலநிலை மாற்றம் திட்டத்தின் கீழ் கடலோர நகரங்களில் பருவநிலை மாற்றம் ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் அதில் இருந்து மீள்வதற்கான அவசியம் குறித்து ஆராய்ச்சியை மேற்கொண்டனர்.

இந்த ஆராய்ச்சி சென்னை, மும்பை, திருவனந்தபுரம், கொல்கத்தா, விசாகப்பட்டினம் உள்ளிட்ட இந்தியாவின் கடலோர நகரங்களில் நடத்தப்பட்டன. சென்னையை பொறுத்தவரை கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளம், அப்போது இருந்த பருவநிலை மாற்றம் ஆகியவற்றை குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வை மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் முடிவில் சென்னை உள்பட இந்தியாவில் ஒரு சில நகரங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பாக சென்னையில் கடந்த 2015 ஆம் ஆண்டு பெய்த கனமழையால் விட பத்து மடங்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. அதாவது 2015ஆம் ஆண்டு 33.32 சதவீத மழை பெய்த நிலையில் வரும் காலங்களில் 233.9 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

மேலும் பசுமை இல்ல வாயுக்களை அதிகம் வெளியேற்றும் முக்கிய நகரங்களில் சென்னையும் ஒன்றாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதே நிலை தொடரும் பட்சத்தில், சென்னையில் வரும் ஆண்டுகளில் அதிகமாக மழைப்பொழிவை உண்டாகி, மீண்டும் பெருவெள்ளம் ஏற்பட வாய்ப்பு அதிகம் இருப்பதாக அவர்கள் கணிக்கின்றனர்.

ஏற்கனவே சென்னையில் கொரோனாவின் பாதிப்பு மிக அதிகமாக இருப்பதால் சென்னையை விட்டு காலி செய்து விட்டு பலர் தங்கள் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது கனமழை குறித்த அச்சமும் எழுந்துள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.