உணவு, எரிபொருள், மின்சாரம் என செலவு ரூ.20 கோடியாம்

கொழும்பு: ரூ.20 கோடி செலவு... வரவு செலவுத் திட்ட விவாதங்களின் போது நாடாளுமன்றக் கூட்டங்களுக்காக கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், விருந்தினர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு உணவு மற்றும் பானங்கள், எரிபொருள், மின்சாரம், நீர், சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் வழங்குவதற்காக இவை செலவிடப்பட்டுள்ளது.


பட்ஜெட் விவாதம் நடைபெற்ற மொத்த நாட்கள் 20 ஆகும்., வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நவம்பர் 14ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதன் பின்னர், வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு நவம்பர் 15ஆம் திகதி ஆரம்பமாகி, 22ஆம் திகதி வரை ஏழு நாட்கள் நடைபெற்றது. பட்ஜெட் குழு விவாதம் நவம்பர் 23ம் திகதி தொடங்கி கடந்த 8ம் திகதி வரை 13 நாட்கள் விவாதம் நடந்தது.


இதேவேளை, கடந்த 13ஆம் திகதி கேள்விகளுக்குப் பதிலளிக்கும் கூட்டம் இடம்பெற்ற போது கேள்விகளைக் கேட்ட எம்.பி.க்கள் பலரும், கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய அமைச்சர்கள் பலரும் அன்றைய தினம் சபைக்கு சமூகமளிக்கவில்லை. அந்தச் சந்திப்பிற்காக கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.