இம்ரான்கானுக்கு வரும் ஜூன் 8ம் தேதி வரை ஜாமீன் வழங்கிய கோர்ட்

பாகிஸ்தான்: வன்முறை தொடர்பான 8 வழக்குகளில் இன்று பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் இம்ரான் கானுக்கு ஜூன் 8 ஆம் தேதி வரை ஜாமீன் வழங்கி உள்ளது.

கருவூல முறைகேடு வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்தபோது நீதிமன்ற வளாகத்தில் வன்முறை ஏற்பட்டது. பல்வேறு காவல் நிலையங்களில் இம்ரான் கான் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி கருவூல முறைகேடு வழக்கு விசாரணைக்கு இஸ்லாமாபாத் உள்ள நீதிமன்றத்தில் இம்ரான் கான் ஆஜராக வந்தபோது, அவரது ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், கடந்த 9-ந்தேதி இஸ்லாமாபாத் கோர்ட்டில் ஊழல் வழக்கு ஒன்றில் ஆஜராக வந்தபோது அவரை துணை ராணுவம் கைது செய்தது. அவர் அல்காதிர் அறக்கட்டளை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இம்ரான்கான் கைது சட்டவிரோதம் என்று தெரிவித்த சுப்ரீம் கோர்ட் அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து இம்ரான் கானுக்கு லாகூர் ஐகோர்ட் ஜாமீன் வழங்கியது. ஜமான் பூங்காவிற்கு வெளியே நடந்த வன்முறை தொடர்பான வழக்கு மற்றும் ஜில் ஷா கொலை தொடர்பான மற்றொரு வழக்கில், பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் (ATC) செவ்வாய்க்கிழமை இம்ரான் கானுக்கு மே 19 வரை ஜாமீன் வழங்கியது.

இஸ்லாமாபாத் உள்ள நீதிமன்றத்தில் போலீஸ்காரர்களுக்கும், இம்ரான் கான் ஆதரவாளர்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதில் 25 போலீஸ்காரர்கள் காயமடைந்தனர். இது தொடர்பாக பல்வேறு காவல் நிலையங்களில் இம்ரான் கான் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

வன்முறை தொடர்பான 8 வழக்குகளில் இன்று பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் இம்ரான்கானுக்கு ஜூன் 8 ஆம் தேதி வரை ஜாமீன் வழங்கி உள்ளது.