மத்திய அரசுக்கு இரண்டு வாரம் அவகாசம் அளித்து நீதிமன்றம் உத்தரவு

மாதத் தவணைக்கு வட்டிக்கு மேல் வட்டி வசூல் குறித்த வழக்கி மத்திய அரசுக்கு இரண்டு வாரம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் காரணமாக, பலருக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வங்கியில் வாங்கிய கடனுக்கான மாதத் தவணை செலுத்துவதற்கு ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கி ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.

ஆனால், கால நீட்டிப்பு காலத்தில் செலுத்தவேண்டிய நிலுவை தொகைக்கு வட்டி மேல் வட்டி போட்டு வங்கிகள் வசூல் செய்வதாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

அந்த வழக்குகள் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, வங்கிக் கடனுக்கான வட்டிக்கு வட்டி செலுத்தும் நடைமுறையை ரத்து செய்ய முடியாது என்றும் கடனை செலுத்துவதற்கான அழுத்தத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் இ.எம்.ஐ. வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரத்தில் முடிவெடுக்க அவகாசம் கேட்கப்பட்டது. மத்திய அரசுக்கு இரண்டு வாரம் அவகாசம் அளித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை வரும் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ஆறு மாத காலத்திற்கு இ.எம்.ஐ. கடன் தொகையை செலுத்தாதவர்களின் கணக்குகளை மறு உத்தரவு வரும் வரை வராக்கடன் பட்டியலில் சேர்க்கக்கூடாது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.