தர்மே கவுடாவின் இறப்பு ஒரு அரசியல் கொலை; முன்னாள் முதல்வர் குமாரசாமி விமர்சனம்

முன்னாள் முதல்வர் விமர்சனம்... தர்மே கவுடாவின் இறப்பு ஒரு அரசியல் கொலை என்று கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டமேலவை துணை சபாநாயகராக செயல்பட்டு வந்தவர் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த தர்மே கவுடா. அவர் தனது வீட்டில் இருந்து இன்று காரில் வெளியே சென்று வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனைத்தொடர்ந்து அவரது உறவினர்களும், உதவியாளர்களும் அவரை தேடினர்.

பின்னர் அவரது உடல் சிக்கமகளூரு மாவட்டத்தின் கதூர் தாலுகாவில் குணசாகரா பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தர்மே கவுடாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை தொடர்பாக அவர் கடிதம் ஒன்றையும் எழுதிவைத்துள்ளார் என்று கூறப்படுகிறது. அந்த கடிதத்தையும் கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தர்மே கவுடாவின் இறப்பு ஒரு அரசியல் கொலை என்று கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், “கர்நாடக துணை சபாநாயகர் தர்மே கவுடாவின் இறப்பு, ஒரு அரசியல் கொலை. தர்மே கவுடாவின் மறைவில் உள்ள உண்மைகளை விரைவில் வெளிக்கொண்டுவர வேண்டும். தர்மே கவுடாவின் தற்கொலை இன்றைய மாசுபட்ட, கொள்கையற்ற, சுயநல அரசியலுக்கான தியாகமாகும்” என்று தெரிவித்துள்ளார்.