20வது அரசிலமைப்பு திருத்தம் குறித்த வரைபு மீளாய்வுக்காக அனுப்பப்பட்டது

மீளாய்வுக்காக அனுப்பப்பட்டது... அரசியலமைப்பில் முன்மொழியப்பட்ட 20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் குறித்த வரைபு சட்டமா அதிபரின் மீளாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

இந்த வரைவு நீதியமைச்சின் செயலாளர் ஊடாக தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி நிஷாரா ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, 19ஆவது திருத்தத்தை நீக்கி 20ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டுவரும் சட்டமூலத்திற்கான பத்திரம் அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.

இதனிடையே, அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை உருவாக்க நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை அமைச்சரவைக்கு இன்னும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ள அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, நிபுணர் குழுவினால் திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அமைச்சரவையால் அவை குறித்து மதிப்பாய்வு செய்யப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், செப்டம்பரில் இரண்டாம் நாடாளுமன்ற அமர்வு வாரத்தில் 20ஆவது திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஒக்டோபர் இறுதிக்குள் 20ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் நவம்பரில் அரசாங்கம் கொண்டுவரவுள்ள அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் 20ஆவது திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை பலவீனப்படுத்தியுள்ள 19ஆவது திருத்தச் சட்டத்தை உடனடியாக நீக்குவதற்கு அரசாங்கம் பிரயத்தனப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.