முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் தொற்றுப்பரவல் கட்டுக்குள் உள்ளது

நோய்ப்பரவல் கட்டுக்குள் உள்ளது... தமிழக அரசு முன்கூட்டியே எடுத்துள்ள வியூகங்களால், மாநிலத்தில் கொரோனா, டெங்கு உள்ளிட்ட நோய்ப்பரவல் கட்டுக்குள் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை ஓமந்தூரார் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் ரூ.2 கோடி செலவில் 16 CT கருவிகளுடன் கூடிய Post Covid Centre-ஐ சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவிலேயே கொரோனா சிகிச்சையில் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், இங்கு புதிதாக நிறுவப்பட்டுள்ள Post Covid Centre-க்கு கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் சிகிச்சைக்காக வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தமிழகத்தில் முப்பரிமாண முறையில் கொரோனாவுக்கு சிகிச்சை வழங்கப்படுவதால் 90 சதவிகிதம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளதாகவும், கொரோனா 2-ம் அலை வந்தால் அதை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். பிற நபர்களைப் போல் அரசு இயந்திரம் வீடியோ கான்பரன்சிங்கில் செயல்படவில்லை என்று பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், பெருந்தொற்று காலத்திலும் களத்துக்கு சென்று அரசு பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழக அரசு முன்கூட்டியே எடுத்த வியூகங்களால் மாநிலத்தில் கொரோனா, டெங்கு உள்ளிட்ட நோய்ப்பரவல் கட்டுக்குள் உள்ளது. பொதுமக்கள் முகக்கவசத்தை முறையாக அணிந்து ஒத்துழைத்தால் எந்த அலையையும் தடுக்க முடியும்இவ்வாறு தெரிவித்தார். இறுதியாக அவர், துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வை ஆன்லைனில் நடத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாகக் கூறினார்.