மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 40 ஆயிரம் கன அடியாக சரிவு

மேட்டூர்: ஒகேனக்கல்லில் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதை அடுத்து ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 40 ஆயிரம் கன அடியாக சரிந்தது.

மேலும் அணையின் முழு கொள்ளளவான 120 அடியாக நீடிப்பதால் அணைக்கு வரும் தண்ணீர் கடந்த சில நாட்களாக அப்படியே காவிரியில் வெளியேற்றப்படுகிறது. எனவே அதன்படியில் இருந்து இன்று காலை 40 ஆயிரத்து 400 கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது.

இதில் 23 ஆயிரம் கன அடி தண்ணீர் நீர்மின் நிலையங்கள் வழியாகவும், 17 ஆயிரம் கன அடி தண்ணீர் 16 கண் மதகான உபரி நீர் போக்கி வழியாகவும் , 400 கன அடி தண்ணீர் கால்வாயிலும் திறந்து விடப்பட்டுள்ளது. காவிரியில் 40 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்வதால் தண்ணீர் காவிரியில் கரை புரண்டு ஒடுகிறது.