இந்தியாவின் தலைநகருக்கு வந்த தலைவலி... குறையாத காற்று மாசு

புதுடெல்லி: டெல்லியில் காற்று மாசு தரம் தொடர்ந்து அபாய கட்டத்தில் இருக்கிறது என்று அமைச்சர் அதிஷி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: டெல்லியில் காற்று மாசு தரம் தொடர்ந்து அபாய கட்டத்தில் இருப்பதா அனைத்து தொடக்கப் பள்ளிகளும்.10ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்படுகிறது. 6-12 வரை உள்ள வகுப்புகளுக்கு பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறும் விருப்பம் அளிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக, அனைத்து அரசு மற்றும் தனியார் தொடக்கப் பள்ளிகள் நவ.2 ஆம் தேதி வரை மூடுவதற்கு டெல்லி அரசு உத்தரவிட்டிருந்தது. டெல்லி மாநகராட்சி அதன் உத்தரவு ஒன்றில், நவ.3,4 ஆகிய தேதிகளில் நர்சரி முதல் 5 வரையுள்ள வகுப்புகளை ஆன்லைனில் நடத்த ஆசிரியர்களைக் கேட்டுக்கொண்டது.

இதற்கு இடையே தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் கடுமையானதாக மாறியது. அதனைத் தொடர்ந்து எந்த முன்னேற்றமும் இல்லாமல் அப்படியே நீடித்தது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி நிலவரப்படி டெல்லியின் ஒட்டுமொத்த காற்றின் தரம் 460 என்ற மோசமான நிலையிலேயே இருந்தது.

சனிக்கிழமை டெல்லியின் சராசரி காற்றின் தரம் 415 ஆக இருந்தது. டெல்லியின் அண்டை நகரங்களான நொய்டா, குருகிராம, தேசிய தலைநகர் பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை காற்றின் தரம் மோசமாக இருந்தது.

இந்நிலையில் டெல்லியின் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கோபல் ராய் ஞாயிற்றுக்கிழமை அளித்த ஊடகப் பேட்டியில், இச்சூழ்நிலையில் அரசு கட்டுமானப் பணிகள் மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும் வாகனங்களை டெல்லிக்குள் தடை செய்வது, பிஎஸ்3 பெட்ரோல் பிஎஸ்4 டீசல் வாகங்களுக்கான தடையை அமல்படுத்துவது, குப்பைகள் மற்றும் பயோமாஸ்களை எரிப்பது போன்றவை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.

மேலும் பொதுமக்கள் தனிப்பட்ட முறையில் வாகனங்களைப் பயன்படுத்துவதை தவிர்த்து பொதுப் போக்குவரத்தினை பயன்படுத்த வேண்டும். ஜிஆர்ஏபி விதிகளை தேசிய தலைநகர் பகுதிகளில் தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என நாங்கள் மத்திய அரசிடம் சனிக்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளோம். உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியாணாவில் பாஜக அரசே ஆட்சியில் இருப்பதால் மத்திய அரசுடன் இணைந்து இந்த விதிகளை டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதிகளில் தீவிரமாக அமல்படுத்த முடியும் என்று நம்புகிறோம் என்று அவர் தெரிவித்தார்.