எஸ்பிபி குறித்து வெளியான தகவல் முற்றுலும் பொய்

பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை கவலைக்கிடமாக இருந்தாலும் நேற்றும், நேற்று முன்தினமும் சீராக இருப்பதாகவும் அவர் தொடர்ந்து வென்டிலேட்டர் மற்றும் எக்கோ கருவிகளின் உதவியால் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் சற்று முன்னர் எஸ்பிபி அவர்களுக்கு கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என ரிசல்ட் வந்ததாகவும் அவர் கொரோனாவில் இருந்து குணம் ஆகி விட்டதாகவும் செய்திகள் பரவின. இந்த செய்தியை அடுத்து தற்போது எஸ்பிபி சரண் அவர்கள் வீடியோ ஒன்றின் மூலம் விளக்கம் அளித்துள்ளார்.

எனது தந்தை கொரோனாவில் இருந்து குணமாகி நெகட்டிவ் ரிசல்ட் வந்ததாக வெளிவந்திருக்கும் தகவலில் உண்மை இல்லை. நான் தினமும் தந்தையின் உடல்நிலை குறித்து தகவல்களை மருத்துவ நிபுணர்களுடன் அறிந்து வெளியிட்டு வருகிறேன். நானும் மருத்துவமனை அறிக்கை வெளியிடுவதும் மட்டுமே உண்மையான தகவல். மற்ற தகவல்களில் உண்மை இல்லை.

எனவே இதுபோன்ற தவறான தகவல்களை தயவு செய்து யாரும் பரப்ப வேண்டாம். எஸ்பிபி அவர்களின் உடல்நிலை நேற்றைப் போலவே இன்றும் சீராக உள்ளது என்பதும் வென்டிலேட்டர் மற்றும் எக்கோ கருவிகளுடன் அவர் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதுதான் உண்மை. மேலும் சில தகவல்களை மாலை மீண்டும் தெரிவிக்கிறேன் என்று எஸ்பிபி சரண் அவர்கள் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து எஸ்பிபி அவர்களுக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்ததாக வெளியான தகவல் வதந்தி என்பது உறுதியாகியுள்ளது.