உரிய நடவடிக்கை எடுக்காத அரசின் அலட்சியமே கொரோனா பரவ முக்கிய காரணம் - சித்தராமையா

கர்நாடகத்தில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் அங்கு கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை வசதிகள் இல்லை என்பதால் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பெங்களூரு துமகூரு ரோட்டில் சர்வதேச கண்காட்சி மையத்தில் கொரோனா நோயாளிகளுக்காக 10,100 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தற்காலிக சிகிச்சை மையத்திற்கு நேற்று காலையில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா சென்று அங்கு படுக்கைகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். பின் ஆஸ்பத்திரியில் செய்யப்பட்டுள்ள மருத்துவ வசதிகள் ஆகியவற்றை கேட்டறிந்தார்.

அதன்பின், சித்தராமையா அளித்த பேட்டியில், இங்கு போதுமான மருத்துவ வசதிகள் இருப்பதாக தெரியவில்லை. நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் இல்லை. அந்த வசதிகளை உடனடியாக அரசு மேற்கொள்ள வேண்டும். அரசு, தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதி கிடைக்காமல் கொரோனா நோயாளிகள் பலியாகும் சம்பவங்கள் நடக்கிறது என்று கூறினார்.

மேலும் அவர், மந்திரிகளுக்கு இடையே ஒற்றுமை இல்லை. மந்திரிகளின் அலட்சியம் காரணமாக அதிகாரிகளை சரியாக பயன்படுத்தி கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. கர்நாடகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் அரசு முழுமையாக தோல்வி அடைந்து விட்டது என்று சித்தராமையா கூறினார்.