கொரோனாவால் நீட் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு வரும் நாளை மறுநாள் தேர்வு

கொரோனா காரணமாக பல்வேறு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் கடந்த மாதம் கொரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த நீட் தேர்வு, கொரோனா கால கட்டுப்பாடுகள் மற்றும் மத்திய அரசின் வழிகாட்டுதல்களுடன் நடைபெற்றது. நாடு முழுவதும் 15 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இத்தேர்வை எழுதினர்.

இருப்பினும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளைச் சேர்ந்த பல மாணவர்களுக்கு நீட் தேர்வை எழுத முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது, கொரோனாவால் நீட் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு வரும் 14ம் தேதி தேர்வு நடத்த அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் தேர்வு முடிவுகளை அக்.16-ம் தேதி தேசிய தேர்வு முகமை வெளியிட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில், ஏற்கனவே நடத்தப்பட்ட நீட் தேர்வின் முடிவுகள் இன்று தேசிய தேர்வு முகமை, அதிகாரப்பூர்வ வலைத்தளமான ntaneet.nic.in இல் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன், நீட் தேர்வை ஒத்தி வைக்கக்கோரி பல்வேறு மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இனியும் நீட் தேர்வை ஒத்தி வைக்க முடியாது என திட்டவட்டமாக கூறி உச்சநீதிமன்றம் அந்த மனுதாக்கல்களை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.