கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1791 ஆக உயர்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 2 வாரத்தில் மட்டும் கொரோனா தொற்றால் ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழகத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 38 ஆயிரத்து 470 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 969 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 89 ஆயிரத்து 532 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,966 ஆக உயர்ந்துள்ளது

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா தொற்றால் 1723 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று 250 பேரின் பரிசோதனை முடிவு வெளிவந்தது. இதில் 68 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1723-ல் இருந்து 1791 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 999 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 11 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 2 வாரத்தில் மட்டும் கொரோனா தொற்றால் ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.