திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் வருகை குறைந்தது

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஊரடங்கு காரணமாக பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. அதன்பின் தற்போது கடந்த ஜூன் மாதம் 10-ந்தேதியில் இருந்து பொது தரிசனத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வேலை பார்க்கும் அர்ச்சகர்கள், ஊழியர்கள் உள்பட 200 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால், பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 3 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்திடீரென ரத்து செய்யப்பட்டது. மேலும், ரூ.300 டிக்கெட் முன்பதிவு செய்யும் பக்தர்களை மட்டும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

தற்போது 9 ஆயிரம் ரூ.300 டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டு டிக்கெட் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்தது.

கடந்த ஒரு வாரத்தில் 40 ஆயிரத்து 805 பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை 4 ஆயிரத்து 250 பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்துள்ளனர். ஒரு நாள் உண்டியல் காணிக்கை ரூ.40 லட்சம் கிடைத்ததாக திருப்பதி ஏழுமலையான் கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.