தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு மேலும் தள்ளிபோக வாய்ப்பு

சென்னை: கடந்த ஜூன் 1ல் திறக்க இருந்த பள்ளிகள் வெயில் காரணமாக ஜூன் 7க்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை, கடந்த 4 நாட்களாக வெளியே கூட செல்ல முடியாத அளவுக்கு இயல்பை விட வெப்பம் அதிகமாகவுள்ளது.

இந்த நிலையில், வெயில் கொளுத்துவதால் பள்ளி திறப்பை மீண்டும் ஒத்திவைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை எழுந்து கொண்டு வருகிறது. அதன்படி, பள்ளி திறப்பு மீண்டும் தள்ளிப்போகும் என தகவல் வெளியாகியுள்ளது.


இதையடுத்து அதன்படி, பள்ளிகள் திறப்பு பற்றி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தவுள்ளார். அதன் பின், ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை அறிவிப்பார். மீண்டும் பள்ளிகள் திறப்பு தள்ளிபோகிறதா என்று இன்னும் சில மணி நேரத்தில் தெரிந்துவிடும்.

இதன் இடையில், அனைத்து பள்ளி வளாகங்களிலும் தூய்மை பணிகள் மற்றும் முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சமயத்தில், பள்ளி சீருடையுடன் வரும் மாணவர்களை இலவச பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அரசுப் பேருந்து நடத்துநர்களுக்கு போக்குவரத்து துறை உத்தரவிட்டிருந்தது. மொத்தம் 2,200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக்கு கழகம் அறிவித்து உள்ளது.