இந்தியாவில் அவசர கால பயன்பாட்டுக்கு முதன்முதலாக ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்படலாம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று தணிந்து கொண்டே வருகிறது. இருப்பினும் இங்கிலாந்தில் 70 சதவீதம் அதிவேகமாக பரவக்கூடிய இந்த வைரசின் புதிய வடிவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், தடுப்பூசி எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு இந்திய மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஜனவரி மாதம் கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்குவதற்கு ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

இந்தியாவில் பாரத் பயோடெக், இந்திய சீரம் நிறுவனம், பைசர் மற்றும் பயோ என்டெக் (எம்ஆர்என்ஏ தடுப்பூசி) ஆகிய 3 நிறுவனங்களும் அவசர கால பயன்பாட்டு அனுமதியை கோரி இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிக்கு இந்த மாத தொடக்கத்தில் விண்ணப்பித்துள்ளன. கடந்த 9-ந்தேதி மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பின் வல்லுனர் குழு, இந்திய சீரம் நிறுவனம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களிடம் இருந்து கூடுதல் பாதுகாப்பு மற்றும் செயல்திறனுக்கான தரவுகளை கேட்டது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனமும் இணைந்து உருவாக்கி, இந்தியாவில் தான் தயாரித்து வழங்குகிற கோவிஷீல்டு தடுப்பூசி தொடர்பான கூடுதல் தரவுகளை சீரம் நிறுவனம் கடந்த வாரம் வழங்கி விட்டதாக தகவல்கள் கூறுகின்றன. எனவே இந்த தடுப்பூசி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்த தடுப்பூசியின் உபயோகத்துக்கு இங்கிலாந்தில் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு எந்த நேரத்திலும் அனுமதி அளிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இங்கிலாந்தின் அனுமதியை இந்தியா எதிர்பார்த்து காத்திருக்கிறது. அப்படி இங்கிலாந்தில் அனுமதி அளிக்கப்பட்ட உடனேயே, மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பின் வல்லுனர் குழு கூடி, அந்த தடுப்பூசி மீது இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி தரவுகளை ஆய்வு செய்யும். அனேகமாக அடுத்த வாரம் இந்த அனுமதி கிடைத்து விடும் என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன. அப்படி வழங்கப்பட்டு விட்டால், இந்தியாவில் அவசர கால பயன்பாட்டு அனுமதி பெறும் முதல் கொரோனா தடுப்பூசி என்ற பெயரை ஆக்ஸ்போர்டின் கோவிஷீல்டு பெறும்.