வாத்துக்களுக்கு உதவியவர் கார் மோதி சம்பவ இடத்திலேயே பலி

கலிபோர்னியா: வாத்துக்களுக்கு உதவியவர் பலி... அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் வாத்துகள் சாலையை கடக்க உதவிய நபர் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

காரில் சென்று கொண்டிருந்த கேசி ரிவாரா என்ற 41 வயது நபர், சாலையில் வாத்துகள் சென்று கொண்டிருப்பதைக் கண்டு காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கி, மற்ற வாகனங்களையும் நிறுத்தி, வாத்துகள் சாலையை கடக்க உதவினார்.

வாத்துகள் சாலையை கடந்து மறுபுறம் சென்றதை பார்த்துக்கொண்டிருந்த மக்கள், கைகளை தட்டி கேசி ரிவாராவுக்கு பாராட்டு தெரிவித்தனர். அப்போது அவ்வழியாக 17 வயது சிறுமி ஒருவர் ஓட்டிவந்த கார் ரிவாரா மீது மோதி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவம் நடந்த இடத்தில் மலர்கள் மற்றும் ரப்பர் வாத்துகளை வைத்து ரிவாராவுக்கு மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கார் விபத்தை ஏற்படுத்திய 17 வயது சிறுமியை கைது செய்யாமல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.